சேலம்: கார்த்திகை விரதம் நாளை தொடங்குவதால் சேலம் கடைவீதியில் துளசி மணிமாலை, டாலர், காவி வேஷ்டி, இருமுடி பொருட்களின் விற்பனை களைக்கட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வது வழக்கம். நடப்பாண்டு கார்த்திகை விரதம் நாளை (17ம் தேதி) தொடங்குகிறது. நாளை முதல் தை முதல் தேதி வரை ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று வருவார்கள். இதையொட்டி சேலம் கடைவீதியில் காவி வேஷ்டி, துளசிமணிமாலை, ஸ்படிகமணி, ஐயப்பன் டாலர், இருமுடி பை, சந்தனம், ஜவ்வாது, விபூதி, குங்குமம், இருமுடிக்கு தேவையான தேங்காய், பொரி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பேரீட்சைபழம், அச்சு வெல்லம், ஊதுபத்தி, நெய் உள்ளிட்டவைகளின் விற்பனை களைக்கட்டியுள்ளது.