சென்னை: அதிமுகவின் கொடிக்கம்பத்தால் ஏற்பட்ட விபத்திற்கு நியாயம் கோரி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதா என்று அதிமுக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வெளியிட்ட அறிக்கை:கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, கடந்த 11ம் தேதி வேலைக்கு சென்றபோது, அவினாசி சாலை கோல்ட்வின்ஸ் அருகே சாலையோரம் நடப்பட்ட அதிமுக கட்சி கொடி கம்பம் விழுந்து, பின்னால் வந்த லாரி ராஜேஸ்வரி மீது ஏறி விபத்துக்குள்ளானதில் இரண்டு கால்களிலும் பலத்த காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்துக்கு காரணமானவர்கள் மீது நியாயமான விசாரணை நடத்தி, சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்தி, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முறைப்படி, காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது.