சென்னை: கேரளாவை போல் தமிழக பள்ளிகளிலும், மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கேரளாவில் பள்ளி மாணவ மாணவிகள் தண்ணீர் குடிக்க வைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தண்ணீர் குடிப்பதற்கு என்றே பாடவேளைகளில் நேரம் ஒதுக்கி தண்ணீர் பருக வைக்கிறார்கள். இது அந்த மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் என்ற கிராமத்தில் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பாடவேளைகளில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களையும் தண்ணீர் பாட்டிலை வீட்டில் இருந்து எடுத்து வரச்சொல்லி தண்ணீர் பெல் என்று பெல் அடித்து பாட வேளைகளில் தண்ணீர் அருந்துவார்கள்.