அண்ணாநகர்: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்று வருகின்றன. இதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காய்கறிகளை வாங்கி செல்வோரும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து மிகுந்த இச்சாலை, சமீபத்தில் பெய்த மழையால் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால், பேருந்துகளை இயக்க முடியாமல், டிரைவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சாலை பள்ளங்களில் சிக்கி பழுதடைந்து வந்தன. குறிப்பாக, கோயம்பேடு மார்க்கெட் எதிரே, சாலை முற்றிலும் சிதிலடைந்து காணப்படுவதால், அப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் நெரிசல் அதிகரித்து வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க முடிவு செய்தனர்.