அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள சத்துணவு பணியாளர் பணியிடங்களை நிரப்புக: மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவிகித சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சமூக நலத்துறை ஆணையர் ஆப்ரகாம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவிகித சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு பள்ளியில் 10 ஆண்டுகளும் மேலாக சமையலராக பணியாற்றி வருவோருக்கு பதவி உயர்வு வழங்கி சத்துணவு அமைப்பாளராக நியமனம் செய்ய வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பதிவு உயர்வு வழங்கும் போது காலியாக இருக்கும் சமையலர் அல்லது உதவி சமையலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே வேளையில் முந்தைய அரசாணைகளை பின்பற்றி உரிய கல்வி தகுதியை சரிபார்த்த பின்னரே நேரடி நியமனம் செய்ய வேண்டும் எனவும் சமூக நலத்துறை ஆணையர் ஆப்ரகாம் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த பணி நியமன நடவடிக்கைகளை வரும் டிசம்பர் 5ம் தேதிக்குள் முடித்து அதற்கான அறிக்கையை டிசம்பர் 10ம் தேதிக்குள் சமூக நலத்துறை ஆணையத்திற்கு அனுப்பவும் ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories: