பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கு அதிமுக பிரமுகர், உறவினருக்கு நிபந்தனை ஜாமீன்

* மருத்துவமனைகளுக்கு தலா 25 ஆயிரம் வழங்க வேண்டும்

* ஐகோர்ட் உத்தரவு

சென்னை:   பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ லாரியில் சிக்கி பலியானார். இது தொடர்பாக, அதிமுக நிர்வாகி ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி கோரி இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், அம்மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில், ஜெயகோபால் மற்றும் மேகநாதன் தரப்பில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, 45 நாட்களுக்கும் மேலாக மனுதாரர்கள் சிறையில் இருப்பதாகவும், எந்த நிபந்தனை விதித்தாலும் பின்பற்ற மனுதாரர் தயாராக இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதி, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக இரு நீதிபதிகள் அமர்வில் தெரிவிக்கப்பட்டதே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என்று அரசுத்தரப்பு வக்கீலிடம் கேட்டார். அதற்கு, அரசு வக்கீல்  குற்றப்பத்திரிகை பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில், ஜெயகோபாலுக்கும், மேகநாதனுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. ஜெயகோபால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரும்வரை மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஆலந்தூர் நீதிமன்றம் அனுப்பும் சம்மனை பெற்றவுடன் அங்கு ஆஜராக வேண்டும். அதன் பிறகு பள்ளிக்கரணை போலீசில் ஆஜராக வேண்டும் மேலும், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில்,  சென்னை கேன்சர் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா ரூ.25 ஆயிரத்தை ஜெயகோபால் வழங்க வேண்டும். மேகநாதனை பொறுத்தவரை அவர் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில மறு உத்தரவு வரும் வரை கையெழுத்திட வேண்டும் என்று என்று நிபந்தனை விதித்தார்.

Related Stories: