கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு ஓரளவு குறைந்திருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை சற்று தளர்த்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் மட்டும் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பின. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. 3 நாட்களாக மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சிற்றார் அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் உபரி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு நீர்விழ்ச்சியில் வரக்கூடிய நீர்வரத்தின் அளவு அதிகரித்த காரணத்தால் நீர்விழ்ச்சியில் 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.