டிவி, பிரிஜ் முதல் சாதாரண கர்சீப் வரை ஆன்லைன் வர்த்தகம் வந்து விட்டது. நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் மட்டுமல்ல, கிராமங்களில் உள்ள இளைஞர்களும் ஸ்மார்ட் மொபைலில் பட்டனை தட்டி விட்டால் வீடு வந்து சேருகிறது என்று பொருட்களை வாங்க துவங்கி விட்டனர். பல சரக்கு பொருட்களை, காய்கறி, பழங்களை கூட ஆன்லைனில் விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. காலத்தின் கட்டாயம் இது என்று சிலர் நியாயப்படுத்தினாலும், பாரம்பரிய பொருளாதாரத்தை நசுக்கும் செயல் இது என்று பலரும், குறிப்பாக சில்லரை வியாபாரிகள் வேதனைப்படுகின்றனர். கிராமங்களில் உள்ள குறு வியாபாரம் என்பது கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்தது. கடைத்தெருவுக்கு ஒருவர் சென்றால், வீட்டுக்கு தேவையான காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் என அன்றாடம் வாங்கி வரும் போக்கு இப்போது சரிந்து வருவது கிராம பொருளாதாரம் அழிவை நோக்கி செல்கிறது என்று தான் பொருள்.