சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில், இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் ேதர்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. மற்ற பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக இளநிலை உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படுவதாக கூறி சமூக விரோதிகள் சிலர் போலி நியமன ஆணை தயார் செய்து இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்துக்கு இளம்பெண் ஒருவர் போலி நியமன ஆணையுடன் வந்துள்ளார். அவரது ஆணையை முதன்மை தலைமை பொறியாளர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்த போது போலி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. அவரிடம் ஊழியர்கள் விசாரணை நடத்திய போது இதே போன்று பலருக்கு பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிய நியமன ஆணை தரப்பட்டு இருப்பதாக கூறினார். இதை கேட்டு பொதுப்பணித்துறை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு புகார் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.