அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து தமிழகம் அமைதி பூங்காவாக திகழ ஒத்துழைக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து தமிழகம் அமைதி பூங்காவாக திகழ ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதா வழியில் தமிழக அரசும் அவரது வழியில் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி சட்டம் ஒழுங்கு மற்றும் மத  நல்லிணக்கத்தை பேணிக் காத்து வருகிறது.சாதி, மத பூசல்கள் இன்றி, அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து மத நல்லிணக்கத்தை பேணி, தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. அயோத்தி வழக்கு பல்வேறு  நிலைகளைக் கடந்து, தற்போது உச்ச நீதிமன்றம் தன்னுடைய இறுதி தீர்ப்பை நேற்று வழங்கி உள்ளது.  

உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கியுள்ள நிலையில், தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து, எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழச் செய்து,  இந்தியாவிற்கே நம் மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: