சென்னை: சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவேலு அமர்வு தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலைகடத்தல் வழக்கு விசாரணையில் தலையிட்டதாக கூறப்படும் இரண்டு அமைச்சர்களின் பெயரை வெளியிட கோரி மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. யானை ராஜேந்திரன் என்பவர் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நடத்தி வரும் விசாரணையில் 2 அமைச்சர்கள் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து பொன். மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ள 2 அமைச்சர்கள் பெயரை வெளியிட யானை ராஜேந்திரன் என்பவர் கோரிக்கைவிடுத்தார். சிலை கடத்தல் வழக்குகளில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் அந்த உத்தரவுகளை முறையாக தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்று சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவேலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.