விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த போலீஸ் வேலைக்கான உடல் தகுதித் தேர்வில் உயரத்தை கூட்டிகாட்ட காலில்பேஸ்ட் தடவி அட்டையை ஒட்டிக்கொண்டு வந்த வாலிபரை தகுதி நீக்கம் செய்து மைதானத்திலிருந்து வெளியேற்றினர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் 2ம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதித்தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் தொடங்கியது.
இதில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தேர்வானவர்களுக்கு உடல்தகுதித்தேர்வு விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று 2வது நாளாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 900 இளைஞர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மார்பளவு, உயரம், 1,500மீட்டர் ஓட்டம் ஆகியவை நடந்தது. இத்தேர்வுகளை தலைமையிட ஐஜி செந்தாமரைக்கண்ணன், டிஐஜி சந்தோஷ்குமார், எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு செய்துகொண்டிருந்தனர்.