சென்னை அருகே உள்ள 12 ஏரிகளை தூர்வாரி கொள்ளளவை அதிகரிக்க கோரி வழக்கு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மக்கள் தண்ணீருக்கு பருவ மழையையும், நிலத்தடி நீரையும் மட்டுமே நம்பியுள்ளனர். சென்னையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. சென்னை மற்றும் சென்னை அருகே புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, போரூர் ரெட்டேரி, கொளத்தூர் ரெட்டேரி, அம்பத்தூர் ஏரி, கொரட்டூர் ஏரி, மாதவரம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, பல்லாவரம் ஏரி, வேளச்சேரி ஏரி என 12 பெரிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் கடந்த 50 ஆண்டுகளாக பெரிய அளவில் எந்த பராமரிப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏரிகள் தூர்வாரப்படவில்லை. இதனால், தண்ணீர் தேக்கம் கடுமையாக குறைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரிகளில் நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளை 10 அடி அளவுக்கு ஆழப்படுத்தி, கொள்ளளவை அதிகரித்தால் சென்னையின் குடிநீர் பிரச்னை தீரும். அதுமட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் அதிகரிக்கும்.

எனவே சென்னை அருகே உள்ள 12 ஏரிகளையும் தூர்வாரி, ஆழப்படுத்தி நீர்த்தேக்க அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த ஏரிகளில் நீர் பிடிப்பை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையரையும் சேர்க்க வேண்டும் என்றும், சென்னையை சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தி, அவற்றின் கொள்ளளவை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு  உத்தரவிட்டனர்.

Related Stories: