சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மக்கள் தண்ணீருக்கு பருவ மழையையும், நிலத்தடி நீரையும் மட்டுமே நம்பியுள்ளனர். சென்னையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. சென்னை மற்றும் சென்னை அருகே புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, போரூர் ரெட்டேரி, கொளத்தூர் ரெட்டேரி, அம்பத்தூர் ஏரி, கொரட்டூர் ஏரி, மாதவரம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, பல்லாவரம் ஏரி, வேளச்சேரி ஏரி என 12 பெரிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் கடந்த 50 ஆண்டுகளாக பெரிய அளவில் எந்த பராமரிப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏரிகள் தூர்வாரப்படவில்லை. இதனால், தண்ணீர் தேக்கம் கடுமையாக குறைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரிகளில் நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளை 10 அடி அளவுக்கு ஆழப்படுத்தி, கொள்ளளவை அதிகரித்தால் சென்னையின் குடிநீர் பிரச்னை தீரும். அதுமட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் அதிகரிக்கும்.