சென்னை: தமிழகத்தில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்பிற்காகவும், ஆழ்கடலில் இருப்பவர்களையும் எளிதில் தொடர்பு கொள்ள மத்திய, மாநில அரசுகளின் மானியத்தில் சாட்டிலைட் போன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சீன நாட்டை சேர்ந்த தனியார் செயற்கைக்கோள் தொலைதொடர்பு நிறுவனத்தின் சாட்டிலைட் போன்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து நேற்று சோதனை செய்யப்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் சாட்டிலைட் போன் பொருத்தப்பட்டு கடற்கரையிலிருந்து சுமார் 50 நாட்டிகல் மைல் தொலைவு வரை சென்று இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சீன நிறுவனத்தின் அதிகாரிகளும், பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் சந்தோஷம் மற்றும் அதிகாரிகளும், காசிமேட்டை சேர்ந்த மீனவர்களும் சென்றனர். இதனை பயன்படுத்திய மீனவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய சாட்டிலைட் போனை விட இந்த போன் மிக பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தனர்.