கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தொடர்புள்ள சயான் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.2017 ஏப்ரலில் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய சயன், மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, உதயன், ஜிதின் ஜாய், ஜாம்ஷேர் உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில்  விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில், தமிழக முதல்வருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரத்தால் வழக்கு திசைமாறி போய்விடும் என்று  கூறி சயன், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையிலடைக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட அரசு வக்கீல் ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தலைமறைவான சயன், மனோஜை பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சயான் குண்டர் தடுப்பு சட்டத்தில் ைகது செய்யப்பட்டார். இதை ரத்து செய்யக்கோரி சயான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்காராம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறி சயானை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்த  நீலகிரி கலெக்டரின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: