வடிவுடையம்மன் கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி பலி

திருவொற்றியூர்: மேடவாக்கத்தை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி சேதுலட்சுமி (65). இவருக்கு நீண்ட நாளாக உடல்நிலை சரியில்லை. இதனால், உடல் நலம் சரியாக வேண்டி பூஜை செய்வதற்காக நேற்று அவரது உறவினர் ஜெயக்குமார் (47) என்பவருடன், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு வந்தார்.  அங்கு, கோயில் கொடிமரம் அருகே, தான் கொண்டு வந்த கோழியை வெட்டி பரிகார பூஜை செய்துள்ளார்.  இதனைப் பார்த்த கோயில் பணியாளர்கள் விரைந்து வந்து சேதுலட்சுமியிடம், “கோயிலுக்குள் கோழியை ஏன் பலி கொடுத்தீர்கள்” என்று கேட்டனர். இதில் ஊழியர்களுக்கும், சேதுலட்சுமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதையடுத்து, கோயில் பணியாளர்கள் சேதுலட்சுமியை கோயில் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கூறினர். கோயில் பணியாளர்களிடம் வாய்த்தகராறு செய்து கொண்டு வெளியே வந்த சேதுலட்சுமி, திடீரென்று மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: