வளசரவாக்கத்தில் பரபரப்பு நடிகர் விஜய்சேதுபதி அலுவலகம் முற்றுகை: வியாபாரிகள் கைது

சென்னை: வளசரவாக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர். நடிகர் விஜய்சேதுபதி, ஆன்லைன் மளிகை பொருள் விற்பனை விளம்பரத்தில் நடித்திருந்தார். இதனால் விற்பனை பாதிக்கும் என கூறி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மேலும் வளசரவாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக றிவித்திருந்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் விஜய்சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஊர்வலமாக வந்தனர். இதையறிந்து அங்கு வந்த வளசரவாக்கம் போலீசார், தடுப்பு அமைத்து வியாபாரிகளை தடுத்து நிறுத்தினர். 80 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: