ஊதிய முரண்பாடுகள் களையப்பட்ட பிறகும் அரசு ஊழியர் சம்பளத்தை நிறுத்தி வைப்பதா? : கருவூல அதிகாரிக்கு சிறப்பு செயலாளர் கடிதம்

சென்னை: அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்ட பிறகும் அவர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்க கூடாது என அரசு துறை செயலாளர் கருவூல கணக்கு ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி சென்னையில் உள்ள கருவூல கணக்கு ஆணையரகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் சீனியர் மற்றும் ஜூனியர்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து 2017ம் ஆண்டு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய விதிமுறை வகுக்க அந்தந்த துறை தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அவர்களே, ஊழியர்களின் விதிமுறைகளை சரிசெய்து கருவூல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும், தற்போதும் இதுபோன்ற முரண்பாடுகள் சரிசெய்யப்பட்ட பிறகும், அதற்கான ஊதியங்களை சில ஆவணங்களை கேட்டு கருவூலத்தில் நிறுத்தி வைக்கிறார்கள் என்று அரசுக்கு புகார்கள் வந்துள்ளது. அதனால், 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசாணையை மேற்கோள்காட்டி கருவூல அதிகாரிகள் ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த கடிதத்தின் நகலை அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என்று கருவூல கணக்கு ஆணையரகத்தில் இருந்து அனைத்து துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: