திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அடர்ந்த மூடுபனி நிலவியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். புறநகர் மின்சார ரயில்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக இயக்கப்பட்டன.திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் காணப்படுகிறது. இன்று காலை திடீரென அடர்த்தியான மூடுபனி இருந்தது. இந்த மூடுபனி காலை 7.30 மணி வரை நீடித்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். சாலையில் 10 அடி துாரத்தில் நடந்து செல்பவர் கூட தெரியாத நிலை ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டுச் சென்றனர்.