அதிதீவிர புயலாக மாறியது மகா புயல்: டையு மற்றும் துவாரகா இடையே நாளை மறுநாள் இரவு கரையை கடக்கும்... இந்திய வானிலை மையம்

டெல்லி: அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள மகா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மகா தீவிர புயலானது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், திசையில் மாற்றமடைந்து வடகிழக்காக குஜராத்தை நோக்கி நகர்கிறது. இந்த புயல் இந்திய துணை கண்ட பகுதியை விட்டு  நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்த நிலையில் திசையில் மாற்றம் பெற்று, குஜராத் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை நிலவரப்படி குஜராத் மாநிலம் வேரவாலிலிருந்து மேற்கு தென்மேற்கே 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது சுமார் 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. டையு மற்றும் துவாரகா இடையே நாளை மறுநாள் இரவு கரையை கடக்கும். அப்போது மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மகா புயல் திசை மாறுவதால் கொங்கன் மற்றும் வட மத்திய மகாராஷ்டிராவில் கன மழை பெய்யும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் லேசனாது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: