சென்னை: மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. குறிப்பாக, பயணிகள் தங்களின் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தியும் வருகிறது. இந்தநிலையில், கடந்த மாதம் 31ம் தேதி வடபழனி, ஆலந்தூர், திருமங்கலம் ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் டிஜிட்டல் கீ-லாக்கர் திட்டத்தை நிர்வாகம் கொண்டுவந்தது. சீரான இடவசதி கொண்ட அதாவது 10 கிலோ வரையிலும் பொருட்களை வைப்பதற்கான லாக்கருக்கு 3 மணி நேரத்திற்கு ரூ.30, 3 முதல் 5 மணி நேரத்திற்கு ரூ.50, 5 முதல் 12 மணி நேரத்திற்கு ரூ.100ம், பெரிய அளவிலான லாக்கர்களை பெற 3 முதல் 5 மணி நேரத்திற்கு ரூ.100ம், 12 மணி நேரத்திற்கு ரூ.250ம் கட்டணமாக இதில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.