பஞ்சராகி நிறுத்தப்பட்ட லாரி மீது பைக் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி: பாடி மேம்பாலத்தில் தொடரும் விபத்து

சென்னை: பாடி மேம்பாலத்தில் பஞ்சராகி நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர்கள் பிரசாந்த் (20), விஜய் (17), சதீஷ் (17). நண்பர்கள். இதில் பிரசாந்த், விஜய் ஆகியோர் பச்சையப்பன் கல்லூரியில் 2ம் ஆண்டு இளங்கலை படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு  நண்பர்கள் 3 பேரும் ஒரே பைக்கில் வில்லிவாக்கம் நோக்கி சென்றனர். பாடி மேம்பாலத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், அப்பகுதியில் பஞ்சராகி நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர், சம்பவ  இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்கள் வந்த பைக் லாரியின் பின்பக்கம் மோதி சுக்குநூறாக நொறுங்கி கிடந்தது.

அப்போது அந்த வழியாக வந்தவர்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி, எஸ்ஐ கலைமணி தலைமையில் போலீசார் சம்பவ  இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரசாந்த், சதீஷ் ஆகியோரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியில் பிரசாந்த் பரிதாபமாக இறந்தார்.சதீஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்பிறகு விஜய், பிரசாந்த் ஆகியோரின் சடலங்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பாடி  மேம்பாலத்தில் தொடர்ந்து நடந்து வரும் விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: