தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சென்னை, புறநகர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் ஒரு சில வார்டுகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை மற்றும் படுக்கை வசதி முறையாக இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மருத்துவமனையின் பழைய 8 மாடி கட்டிடத்தில் உள்ள வார்டுகளில் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. படுக்கை பற்றாக்குறையால் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம் உள்ளது.