உள்ளாட்சி தேர்தலில் உதவி தேர்தல் அலுவலர் பணியால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கும்: சங்க தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் உதவி தேர்தல் அலுவலர் பணியால் கற்றல், கற்பித்தல் பணி பாதிக்கும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் பி.கே.இளமாறன் கூறினார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேர்தல் பணி என்பது தலையாயப் பணி, ஜனநாயக கடமை அதனை ஒவ்வொரு முறையும் ஆசிரியர்கள் திறம்பட செய்துவருகின்றனர். இதுவரை தேர்தல் நடைபெறும் நாள் அதற்காக  இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை நாளிலோ வேலை நாளிலோ பயிற்சி வகுப்புகள் நடக்கும். தேர்தலுக்கு முந்தைய நாள் முன்னேற்பாடுகளுக்காகவும் தேர்தலுக்காகவும் தொடர்ந்து இரண்டு நாட்கள் என பணிபுரிந்து வந்தோம். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உள்ளிட்ட வாக்குச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள் கடந்த தேர்தல் வரை பணியாற்றினோம். அது கற்பித்தல் பணி பாதிக்காத அளவிற்கு இருந்தது. தற்போது அறிவிக்கப்பட உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக, தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரியாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிப்பிலிருந்து குறிப்பாக வேட்புமனு பெறுவதிலிருந்து தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை குறைந்தபட்சம் 15 நாட்களிலிருந்து அதிகபட்சம்  ஒரு மாதம் வரை இந்த பணி நீடிக்கும். உதவி தேர்தல் அதிகாரி பணி இதுவரை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. மேலும், ஏற்கனவே வாக்காளர் சரிபார்க்கும் பிஎல்ஒ, டிஎல்ஓ பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் வீதம் வருடம் முழுவதும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்காக உதவி தேர்தல் அதிகாரி பணி வழங்குவதால் கற்றல் - கற்பித்தல் பணி பெரிதும் பாதிப்பு ஏற்படும். புதிய பாடத்திட்டம் - அதிக பாடம்  பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதற்கு போதிய கால அவகாசமின்றி சிரமப்பட்டு வருகிறோம். இந்நிலையில் உதவி தேர்தல் அதிகாரி பணி வழங்கப்படுவதால் முற்றிலும் கற்பித்தல் பணி பாதிக்கும்.மாணவர்களின் நலன்கருதி தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரி பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு அரசு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: