கொடைக்கானல்: கொடைக்கானலில் மழை குறைந்ததால் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பங்கள் சாய்ந்து சில இடங்களில் மின்விநியோகம் தடைபட்டது. தற்போது இதன் சீரமைப்பு பணிகள் பாதிக்கு மேல் முடிந்துள்ளன. கனமழை காரணமாக கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி, தூண்பாறை, பைன் பாரஸ்ட், குணா குகை, மன்னவனூர் ஏரி ஆகிய இடங்கள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.