வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் காவல், தீயணைப்பு, வருவாய், மீன்வளம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளும், இதில் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து அடுத்து வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மழைநீரை தூர்வாரும் வடிகால் பணிகள், சாலைகள் சீரமைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே சென்னை மாநகராட்சி சார்பில் ஊர்க்காவல் படையை சேர்ந்த 100 பேர் மற்றும் தன்னார்வலர்கள் 100 பேர் என மொத்தம் 200 பேருக்கு மழை வெள்ளத்தின் போது மீட்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த பயற்சி முடித்தவர்களுக்கு மீட்பு பணிக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் அடங்கிய 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Related Stories: