கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு, ஆவணப்படுத்தும் குழுவினர், வேப்பனஹள்ளி எம்எல்ஏ., முருகன் தலைமையில், வேப்பனஹள்ளி அடுத்த நக்கநாயன பண்டா என்னுமிடத்தில் உள்ள மலையில், தமிழகத்தின் மிகப்பெரிய பாறைக்கீறல் ஓவியங்களை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: வேப்பனஹள்ளி ஒன்றியம் கொங்கணப்பள்ளி கிராமத்திற்கு அருகே உள்ள மலைப்பகுதியில், 2 கி.மீ. தொலைவு வனப்பகுதியில் நடந்து சென்றால் நக்கநாயன பண்டா என்ற இடம் உள்ளது. அங்கு மழை நீர் சிற்றோடை போல் ஓடிக்கொண்டிருக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த இவ்விடத்தில் உள்ள 3 பாறைகளில், பாறைக்கீறல் ஓவியங்கள் காணப்படுகின்றன. பாறை ஓவியங்களும், பாறைக் கீறல்களும், வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களின் முக்கியமான இரு கலை வடிவங்களாகும். தமிழகத்தின் முதல் பாறை ஓவியம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது போல், தற்போது தமிழகத்தின் மிகப்பெரிய அதாவது சுமார் 6 அடி உயரமுள்ள ஒரே வடிவிலான 3 பாறை கீறல்களும் முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.