தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த இரு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகளவு மழை பெய்கிறது. இதில் பாசனத்திற்கு 4 ஆயிரத்து 458 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் மணிமுத்தாறுக்கு 1,512 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து பாசனத்திற்காக 350 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக காற்றாற்று வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளிலும் புரண்டு ஓடுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகளை ஆங்காங்கே கண்காணிக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  

மேலும் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, சேரன்மகாதேவியல், பாளையங்கோட்டை ஆகிய தாமிரபரணி நிதிகரையோரம் உள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தாமிரபரணி புஷ்கரணம் ஓராண்டு நிறைவு விழா நாளை முதல் 4 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவினையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தாமிரபரணி நதியில் குளிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Related Stories: