மானாமதுரையில் ஒரே நாளில் சோகம் 2 விபத்துகளில் 3 பேர் பலி

மானாமதுரை: மானாமதுரையில் நேற்று ஒரே நாளில் நடந்த 2 சாலை விபத்துகளில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட், பாரதி நகரை சேர்ந்தவர் முருகன் (46). இவர் நேற்று டூவீலரில் மூர்த்தி (58) என்பவருடன், மானாமதுரை ஆனந்தபுரம் சர்வீஸ் ரோட்டில் இருந்து சிவகங்கை பைபாஸ் ரோட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசு பஸ் மோதியது. இதில் முருகன், மூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தனர். புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் சில மணிநேரத்தில் சாலைக்கிராமத்தில் இருந்து சென்ற அரசு பஸ்சின் மீது மதுரையில் இருந்து சென்ற கார் மோதியது. இதில் பஸ் படியின் அருகே நின்றிருந்த சாலைக்கிராமம் அருகே வண்டல் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (26) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுபோல் மானாமதுரை புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல முயன்ற முதியவர் மீது திண்டுக்கல்லில் இருந்து சென்ற கார் மோதியதில் தலைக்காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர் யார் என்பது தெரியாத நிலையில், சிவகங்கை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: