தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரபல ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து சேதம் அடைந்தன. கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் அருகே கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பிரபல ஜவுளிக்கடை கடந்த ஒரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிவதை கண்ட இரவு நேர காவலர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீ விபத்தில் கடையில் 3 மாடிகளுக்கும் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் மின்சார துறையினர் வந்து அப்பகுதியில் உள்ள மின் இணைப்பை துண்டித்தனர்.