2028 ஒலிம்பிக்கில் முதல் 10 இடங்களில் நிச்சயம் இந்தியா இடம்பிடிக்கும்: மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

சென்னை: 2028 ஒலிம்பிக்கில் முதல் 10 இடங்களில் நிச்சயம் இந்தியா இடம்பிடிக்கும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள விளையாட்டு அறிவியல் மையத்தில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி ஆடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹாக்கி ஆடுதளத்தை திறந்து வைத்து மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசினார். அவர் பேசியதாவது; விளையாட்டு என்பது நமது நாட்டின் ஒற்றுமையை உறுதி செய்கிறது. படிக்காமல் விளையாடி கொண்டிருந்தால் முன்னேற முடியாது என்று பலரும் கூறுவர், அதை நாம் மாற்ற வேண்டும்.

இனி விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் விளையாட்டு ஒரு பாடமாக்கப்படும். இந்தியாவிற்காக விளயைாடி தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் என்னை அணுகலாம், தேவையான உதவிகள் செய்யப்படும். வரும் 2020 நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு சில மாதங்கள் தான் உள்ளன. 2024 ஒலிம்பிக்கில் இரட்டை இலக்க பதக்கம் பெற முயற்சிப்போம். 2028-ல் பதக்கம் பெற்ற நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடிக்க இந்தியா முயற்சி மேற்கொள்ளும்.  தமிழகம் விளையாட்டு கலாசாரம் கொண்ட மாநிலமாக திகழ்ந்து வருகிறது. எதிர்காலத்தில் விளையாட்டு துறையில் தமிழகத்தில் இருந்து திறமையான வீரர்கள் வருவார்கள் என நம்புகிறேன் என்று பேசினார்.

Related Stories: