தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் திருவான்மியூர், மாதவரம் பகுதிகளுக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம்: நவ.12, 13ம் தேதி நடக்கிறது

சென்னை: திருவான்மியூர் நரிக்குறவர் காலனி மற்றும் மாதவரம் சாஸ்திரி நகர் திட்டப் பகுதிகளுக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நவம்பர் 12, 13ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளை சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித் திட்டங்களின்  கீழ் மேம்படுத்தப்பட்ட குடிசைப் பகுதிகளாக மாற்றி அங்கு வசித்து வந்தவர்களுக்கே, அவர்களின்  மனைகளுக்கு வாரியத்தால் ஒதுக்கீடு  ஆணை வழங்கப்பட்டிருந்தது. இத்திட்டப்பகுதியின் நிலங்களை வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாக உயர் அலுவலர்கள் கொண்ட செயலாக்கக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழு எடுத்த முடிவுகளின்படி தமிழகம் முழுவதும் உள்ள 17 திட்டப்பகுதிகளின் நிலங்கள் வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2,368 மனை ஒதுக்கீடுதாரர்கள் கிரயப்பத்திரம் பெற்று பயனடைவார்கள். இதில் முதற்கட்டமாக சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட திருவான்மியூர் நரிக்குறவர் காலனியின் 70 ஒதுக்கீடுதாரர்கள் மற்றும் மாதவரம் சாஸ்திரி நகரின் 94 ஒதுக்கீடுதாரர்கள் என மொத்தம் 164 நபர்களின் மனைகளுக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நவம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் நவம்பர் 12ம் தேதி திருவான்மியூர் நரிக்குறவர் காலனி ஒதுக்கீடுதாரர் களிடமிருந்தும், நவம்பர் 13ம் தேதி மாதவரம் சாஸ்திரிநகர் ஒதுக்கீடுதாரர்களிடமிருந்தும் மனுக்கள் நேரடியாக பெறப்படும். மேற்குறிப்பிட்ட திட்டப்பகுதிகளில் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் அல்லது வாரிசுதாரர்கள் தாங்கள் அளிக்கும் மனுவுடன் ஒதுக்கீடு ஆணை நகல், இருப்பிட சான்றுகளாக உணவு பங்கீடு அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல்கள் இணைக்க வேண்டும். வாரிசுதாரர்களாக இருப்பின் ஒதுக்கீடுதாரரின் இறப்பு சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் அசல் மற்றும் மனைக்கு முழு கிரயம் செலுத்திய ரசீது, கடன் பெற்றிருப்பின் கடன் தொகை செலுத்திய வாரிய ரசீது நகல்களை இணைத்து வழங்க வேண்டும். கிரயப்பத்திரம் கோரும் ஒதுக்கீடுதாரர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: