திருமலை: கல்கி ஆசிரமம் வனத்துறை மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வரதய்யபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ44 கோடி இந்திய பணம் மற்றும் ரூ20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு டாலர்கள், 20 கிலோ தங்கம், ரூ5 கோடி மதிப்புள்ள வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ400 கோடிக்கு மேல் சீனா, ஆப்ரிக்கா, கென்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முதலீடு செய்திருப்பதும் கல்கி ஆசிரமத்திற்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு 5 ஏக்கரில் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம் தற்போது பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வரதய்யபாளையம் மற்றும் பி.என். கன்ரிகா மண்டலத்தில் இயங்கி வருகிறது.