எஸ்.ஏ.பாப்டேவை புதிய உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல்: நவ.18ல் பொறுப்பேற்பார் என அறிவிப்பு

புதுடெல்லி: புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 18ம் தேதி பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு தற்போதைய மூத்த நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பெயரை மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த அக்டோபர் 18ம் தேதி பரிந்துரை செய்தார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி, பதவியில் இருக்கும் நீதிபதிகளின் பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்னதாக தனக்கு அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்பது தற்போது வரை நடைமுறையில் உள்ள வழக்கம். அதன்படி தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாயின் பதவி காலம் அடுத்த மாதம் அதாவது நவம்பர் 17ம் தேதியோடு முடிய உள்ளது. இதில் முன்னதாக அவர் வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி வழக்கின் தீர்ப்பை வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனக்கு பிறகு புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான ஷரத் அரவிந்த் பாப்டேவை (எஸ்.ஏ.பாப்டே) நியமிக்கலாம் என மத்திய அரசுக்கு ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து கடிதம் எழுதியிருந்தார். இந்த பரிந்துரை விரைவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி முடிவு எடுக்கப்பட உள்ளதாக இருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற புதிய நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 47வது புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே வரும் நவம்பர் மாதம் 18ம் தேதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின், அவர் 2021ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை இந்த பதவியில் இருப்பார் எனக் கூறப்படுகிறது.

Related Stories: