சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ளபடி 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை விரைவில் வர உள்ளதால், தமிழகத்தில் 5, 8 ம் வகுப்புகளுக்கு இதுவரை உள்ள முப்பருவ முறை ரத்தாகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முப்பருவ தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. கீழ் வகுப்புகளை அடுத்து உயர்வகுப்புகளான 6, 7, 8, 9ம் வகுப்புகளுக்கும் படிப்படியாக இந்த முப்பருவ முறை கொண்டு வரப்பட்டது. தற்போது வரை முப்பருவ முறை கல்வி முறைதான் தமிழகத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களில், தொடக்க, நடுநிலைக் கல்வியில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து பல எதிர்ப்புகள் கிளம்பியதால், பொதுமக்களிடம் கருத்துகேட்ட பிறகு புதிய கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது.