சென்னை: தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடி விபத்து காரணமாக தீக்காயம் அடைந்த 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில், நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது, பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் அதையும் மீறி ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரங்களில் பட்டாசு வெடித்தனர். நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு 67 அழைப்புகள் வந்தன. இதில் 26 அழைப்புகள் சிறிய அளவிலான பட்டாசு விபத்துக்கள். மீதம் 41 அழைப்புகள் எளிதில் கட்டுப்படுத்தக் கூடிய பட்டாசு தீ விபத்துக்கள். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று 31 பேர் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீக்காயத்துக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 7 பேர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் தீக்காயங்களால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தாமணி ஆய்வு செய்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.