ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி அமெரிக்க பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானதை உறுதி செய்தார் அதிபர் டிரம்ப்

நியூயார்க்: ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி, அமெரிக்க பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிபடுத்தி உள்ளார்.

சிஐஏ., எனப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வு மூலம், இருப்பிடத்தை கண்டுபிடித்த அமெரிக்க படைகள் , அவரை கொன்றுவிட்டதாக கூறப்பட்டது. இந்த தகவலை அதிபர் டிரம்ப், இன்று மாலை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், மிகப்பெரிய விஷயம் நடந்துள்ளது, என மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாக்தாதி தொடர்ந்து இரண்டு வாரங்கள் கண்காணிப்பில் இருந்தார். பாக்தாதி மூன்று இளம் குழந்தைகளுடன் இருந்தார். மேலும் அவர் தற்கொலை உடையை வெடிக்கச் செய்து அவர்கள் அனைவரையும் கொன்றார். குண்டு வெடிப்பில் பாக்தாதியின் உடல் சிதைந்தது. டி.என்.ஏ., சோதனையின் அடிப்படையில் அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது. பாக்தாதி தனது தருணத்தில் முழு பயத்தோடு கழித்தார். அமெரிக்க படைகள் அவரைத் தாக்குவதை கண்டு பயந்து போனார் என்றார். பாக்தாதியுடன் இருந்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். சிலர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் எந்த ஒரு அமெரிக்க வீரர்களும் கொல்லப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: