சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட பல லட்சம் பேர் வெளியூர் சென்றுவிட்டதால் சென்னையின் முக்கிய சாலைகளில் நேற்று அதிக வாகனங்கள் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையில் வசிப்பவர்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள். தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல பஸ், ரயில்களில் கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து மட்டும் கடந்த ஒரு சில நாட்களில் ரயில், பஸ்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இதுதவிர கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பல லட்சம் பேர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வெளியூர் சென்றுள்ளனர். இப்படி பல லட்சம் பேர் வெளியூர் சென்றதால் சென்னையின் முக்கிய சாலைகளில் நேற்று காலையில் இருந்தே அதிக வாகனங்கள் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ள அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கடற்கரை பகுதியான காமராஜர் சாலை, பல்லாவரம் வழியாக ஓஎம்ஆர் வரையிலான ரேடியல் சாலை, வேளச்சேரி சாலை, மயிலாப்பூர், ராயப்பேட்டை, அடையாறு உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.