தீபாவளியை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு: டீன் தகவல்

கீழ்ப்பாக்கம்: தீபாவளி பண்டியை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று முதல் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் வசந்தாமணி கூறியதாவது:  தீபாவளியை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிப்பது வழக்கம். பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளை அருகில் அனுமதிக்க கூடாது. இருக்கமான பருத்தி  ஆடைகளை அணிந்துகொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும்.

பெரியவர்கள் துணையுடன் சிறியவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. குடிசை பகுதிகளிலும், வீட்டிற்குள்  வைத்தும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. வெடிக்காத பட்டாசுகளை எரிக்க கூடாது. தோசைமாவு, காப்பித்தூள், இங்க் ஆகியவற்றை தீக்காயத்தில் தடவ கூடாது. ஏதாவது அசம்பாவித சம்பவம் ஏற்பட்டால், தீக்காயம் ஏற்பட்டவர்களை  உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை பிரிவு  இன்று முதல், 28ம் தேதி வரை செயல்படும். இதில் ஒரு தலைமை மருத்துவர், 2 உதவி மருத்துவர், 5 செவிலியர்கள், 2 உதவியாளர்கள் 24 மணி நேரம் இருப்பார்கள். சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இங்கு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: