பாதுகாப்புக்காக மகன் பூட்டிவிட்டுச் சென்றதால் விபரீதம் தீப்பிடித்த வீட்டில் சிக்கிய தாசில்தார் உயிருடன் மீட்பு

சென்னை, அக். 26: திருமுல்லைவாயலில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டுக்குள் சிக்கிய ஓய்வுபெற்ற தாசில்தாரை பொதுமக்கள் உயிருடன் மீட்டனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகர்,  1வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரராமன் (75),  ஓய்வு பெற்ற தாசில்தார். இவரது மனைவி இறந்துவிட்டார். இவரது மகன் ராமச்சந்திரன் (42). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியார் நிறுவன ஊழியர். ராமச்சந்திரன் வேலைக்கு  சென்ற பிறகு சங்கர்ராமன் வீட்டில் தனியாக இருப்பார். இதனால், தந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி ராமச்சந்திரன் தினமும் வேலைக்கு செல்லும்போது அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது வழக்கம் என  கூறப்படுகிறது.

நேற்று காலை தந்தை சங்கரராமனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு  சென்றுவிட்டார். இந்நிலையில், பிற்பகல் 2.30 மணியளவில் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. மேலும், சங்கரராமனின் அலறல் சத்தமும் கேட்டுள்ளது.   இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீடு தீப்பிடித்து எரிந்துக்கொண்டிருந்தது. சங்கரராமன் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே  அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தீவிபத்தில் வீட்டில் இருந்த மரக்கட்டில், சோபா உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமானது. புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார்  வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: