அம்பத்தூர்: அம்பத்தூர் ஐசிஎப் காலனியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தால் சாலை சேதமடைந்தது கிடக்கிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 86வது வார்டில் ஐசிஎப் காலனி பிரதான சாலையை ஐசிஎப் காலனி, அயனம்பாக்கம், அத்திப்பட்டு, கொன்ராஜ்குப்பம், கோலடி, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஐசிஎப் காலனி சாலை சேதமடைந்து தற்போது பெய்யும் மழையால் சேறும் சகதியுமாக மாறிவிட்டதால் சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஐசிஎப் காலனி பிரதான சாலையில் 3 பள்ளிக்கூடம், 2 மருத்துவமனை, 1000 வீடுகள் கொண்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், 100க்கு மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் இந்த சாலை சேதமடைந்துள்ளது. தற்போது பெய்து வரும் பருவமழையால் சேதமடைந்த சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.