சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த பரிஜானா (27) என்ற பெண், சுற்றுலா பயணியாக மலேசியா சென்று, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவரை நிறுத்தி சுங்க இலாக்கா அதிகாரிகள் விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். இதனால், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அதே நேரத்தில், துபாயில் இருந்து தனியார் விமானம் சென்னைக்கு வந்தது. அதில், ராமநாதபுரத்தை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவர் சுற்றுலா பயணியாக துபாய் சென்று, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவருடைய உடமைகளை சோதனையிட்டனர். அப்போது, அவரது கைப்பைக்குள் ரகசிய அறை வைத்து, அதற்குள் 2 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர், அவரை தனி அறைக்குள் அழைத்து சென்று சோதித்தபோது அவரது ஆசன வாய்க்குள் மறைத்து வைத்திருந்த சிறிய பார்சலில் தங்க கட்டிகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.
பரிஜானா மற்றும் சதக்கத்துல்லா ஆகிய 2 பேரிடம் இருந்து 967 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹38.37 லட்சம். இதையடுத்து 2 பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.