அறந்தாங்கி: அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 2 ஜெனரேட்டர்கள் மழையில் வீணாகி வருகிறது. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் 52 கிராம ஊராட்சிகளை கொண்டது. இதில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களுள் அறந்தாங்கியும் ஒன்று. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய பகுதிகள், கடந்த ஆண்டு தாக்கிய கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் இந்த ஒன்றியத்தின் பல பகுதிகளில் மின்சார வினியோகம் இல்லை. இதனால் கிராமப்பகுதிகளில் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராம ஊராட்சிகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து தனியார் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. கஜா புயலின் தாக்கம் குறைந்த பிறகு அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பல லட்ச ரூபாய் செலவில், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 ஜெனரேட்டர்களை வாங்கியது. அப்போது வாங்கப்பட்ட ஜெனரேட்டர்கள் கிராமப்பகுதிகளுக்கு கொண்டு செல்லாமல் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டது.