நாகை அருகே திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் யானை சூளிகாம்பாள் இறந்தது

*பொதுமக்கள் மலர்தூவி கண்ணீர் அஞ்சலி

நாகை : நாகை அருகே திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் யானை சூளிகாம்பாள் வயது முதிர்வால் நேற்று இறந்தது. பொதுமக்கள் மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இது வாஸ்து மற்றும் அப்பர் ஐக்கியமான தலமாகும். இவ்வாறு பல்வேறு வரலாற்று சிறப்புடைய இக்கோயில் வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர் 18வது குருமகா சந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சூளிகாம்பாள் (72) என்ற பெண் யானை ஆதிர்வாதம் வழங்கி வந்தது. சிறு வயது முதல் இந்த கோயிலில் சூலிகாம்பாள் வளர்ந்து வந்தது. இந்நிலையில் இந்த யானைக்கு 72 வயதானது. இதனையடுத்து வயது முதிர்வின் காரணமாக நேற்று திடீரென இறந்தது. கோயில் யானை இறந்தது குறித்து திருநெல்வேலியில் தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு சென்றிருந்த கோயில் குருமகா சந்நிதானத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இறந்த சூளிகாம்மாளுக்கு அப்பகுதி பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர். இதன் பின்னர் கோயிலின் முருகநாயனார் தோட்டத்தில் இன்று (22ம்தேதி) சிறப்பு பூஜைகள் செய்து யானை சூளிகாம்பாள் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Related Stories: