வேளச்சேரி: குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்த சுபஸ்ரீ (23), துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 12ம் தேதி தனது மொபட்டில் துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்றபோது, பள்ளிக்கரணை அருகே சென்டர் மீடியனில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு பேனர் காற்றில் பறந்து, சுபஸ்ரீ மீது விழுந்தது. நிலை தடுமாறிய அவர், சாலையில் விழுந்தபோது, பின்னால் வந்த லாரி மோதி இறந்தார். நீதிமன்ற கண்டனத்துக்கு பிறகு பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து, அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோரை கைது செய்தனர்.