சென்னை: தமிழகத்தில் கடந்த 17ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் டெங்கு உள்ளிட்ட வைரல் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. இதனால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தாங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதேபோல், டாஸ்மாக் கடைகள் மற்றும் அவை அமைந்திருக்கும் பகுதிகள் அசுத்தமாக உள்ளதாக தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது. மேலும், மழை காலங்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு அருகிலே மழை நீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வழிவகுத்து வருகிறது. எனவே, இதை தடுக்க டாஸ்மாக் கடைகள் மற்றும் அவை அமைந்திருக்கும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.