தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கென தனிப்பிரிவுகள் தொடங்கப்பட்டு நோயாளிகளுக்கு 24 மணி நேர தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெங்குவைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தமிழக சுகாதாரத்துறை காய்ச்சல் ஏற்பட்ட உடன் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில வாரங்களில் 50 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சலுடன் 107 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு ரெட் ஜோன் எனப்படும் தனிப்பிரிவில் 24 மணி நேர தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இங்கு காய்ச்சலுக்காக கொசு வலையுடன் கூடிய 90 படுக்கைகள் கொண்ட நான்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வண்ணம் ஏராளமான மதுபாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை குவித்து வைத்திருந்த தனியார் விடுதியின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. புதுக்கோட்டையில் நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், கீழ ராஜ வீதிகள், அய்யனார்புரம், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நகராட்சி பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மார்த்தாண்டபுரம் முதல் வீதியில் உள்ள தனியார் விடுதியில் ஏராளமான மது பாட்டில்களும் தண்ணீர் பாட்டில்களும் குவிந்திருந்தது. டெங்கு கொசு உற்பத்தியாகும் படி மது பாட்டில்களையும் தண்ணீர் பாட்டில்களையும் குவித்து வைத்திருந்த விடுதியின் உரிமையாளர்களுக்கு நகராட்சி ஆணையர் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

Related Stories: