சென்னை: இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு பட்டியலை வெளியிடாததை கண்டித்து, உதவியாளர்கள் பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், சார்பதிவாளர் முதல்நிலை முதல் நான்காம் நிலை வரை, மாவட்ட பதிவாளர், ஏஐஜி, டிஐஜி என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், உதவியாளர்களாக பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்டோருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2018-19, 2019-20க்கான உதவியாளரில் இருந்து சார்பதிவாளர் நான்காம் நிலை பதவி உயர்வு பட்டியல் தயார் செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக உதவியாளர்கள் தரப்பில் பதவி உயர்வு பட்டியல் வெளியிடக்ேகாரி பலமுறை கோரிக்கை வைத்தும் பதிவுத்துறை ஐஜி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மூத்த உதவியாளர்கள் 36 பேர் சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள், பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால், பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.