காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கட்டாய வசூல்? : எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகிக்கும் போது,  டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் லோகரங்கன், உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணத்துடன், அதை வினியோகிப்பதற்கான கட்டணமும் சேர்த்து ரசீதில் குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப, 20 ரூபாய் முதல் 100 வரை கூடுதல் கட்டணம் வலுக்கட்டாயமாக வசூலிக்கிறார்கள். எனவே, சிலிண்டர்கள் டெலிவரிக்காக கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வக்கீலிடம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி தகவலை மட்டும் பெற்று வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு மனு கொடுத்தீர்களா? என்று கேட்டனர். அதற்கு, மனுதாரர் வக்கீல், 2124 புகார்கள் மொத்தம் வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என்று பதிலளித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் சார்பில் ஆஜரான வக்கீல்களிடம், என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?. அப்படி நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் உங்கள் இணைய தளங்களில் வெளியிடலாமே என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கில் மத்திய அரசும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: