சென்னை: காவல் ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் சென்னை நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசாரின் நலன், குறை தீர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மணீஷ் குமார் என்பவர் கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு காவல் துறையினருக்கான ஆணையத்தை அமைப்பது, அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை தொடர்பாக உத்தரவிட வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தனர்.